இன்றைய சமூகத்தை உலுக்கி எடுக்கும் ஒரு ஆவணப்படத்தின் கதை..
இதில் சிக்கி தவிக்கும் பெண்கள் ...
தாயாக மனைவியாக சகோதரியாக மகளாக வலம் வரும் பெண்களின் இந்த மாதாந்திர பிரச்னையை
எத்தனை ஆண்கள் மகனாக கணவனாக சகோதரனாக அப்பாவாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்
என் கேள்வியுடன் துவங்குகிறது..
கேள்விக்கு உண்மையான விடை பூஜ்யம் தான் அதற்காக வருந்த வேண்டாம் சகோதரர்களே
இது வரை எப்படியோ இனியாவது புரிந்து கொண்டு அந்த நாட்களில் பரிவுடன் நடந்து கொள்ளுங்கள் ..
"மாதவிடாய் "என்ற வார்த்தையை உபயோகிக்கவே இன்னும் இந்த சமுதாயம் கேவலமாகவே நினைக்கிறது.
"வீட்டுக்கு தூரம்" என்ற வார்த்தைகளிலேயே பெண்களை ஒடுக்குமுறை கொண்டு ஒதுக்குகிறது.
எவ்வளவு நாகரிகம் பேசினாலும் எப்படிப்பட்ட செல்வந்தர்களாக இருந்தாலும்
இன்னமும் அந்த நாட்களில் ஒதுக்கி வைக்கவும் ஒதுங்கிச் செல்லவும்தான் செய்கிறார்கள்.
பேட்டிகளில் பெண்கள் குமுறுகிறார்கள்.
இன்னமும் கிராமஙகளில் முட்டு வீடு என்ற பெயரில் இந்நாட்களில் தனிமைப்படுத்தப்படுவதினால் எத்தனை பாதிக்கப்படுகிறோம் என்று கிராமத்து பெண்களின் மனக்குமுறலில் கண்ணீர் நம் பக்கமும் வருகிறது. "முட்டு வீட்டில் "தனிமைப்படுத்தப்படும் பெண்கள் பாம்பு கடித்து இறந்த நிஜக்கதையெல்லாம் உண்டு என்கிறார்கள் ..
மாதவிடாய் என்பது அசிங்கமானதோ அருவெறுப்பானதோ புதிரோ தீட்டோ அல்ல.
தாய்ப்பாலை போன்று பெண்ணின் உடலில் ரத்தத்தில் ஊறும் இயற்கையான சங்கதி.
இந்த அறிவியல் ரீதியான புரிதல் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கே இல்லை என்பது தான் நிஜம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
முகச்சவரம் செய்யும் ஆண்களுக்கு ரேசர் போலத்தான் பெண்களுக்கு இந்த நாப்கின். ஆனால் இந்த நாப்கின் வாங்கி வரவோ தரவோ ஏன் இவ்வளவு கூச்சம் . அதை ஒரு பேப்பரில் சுருட்டி கருப்பு கலர் பாலிதீன் பையில் ரகசியமாக வைத்து கொடுக்கும் கெட்ட பழக்கத்தை எப்போது விடப்போகிறார்கள் .
டி.வி.க்களில் பிரமாதமாக நாப்கின் பற்றி விளம்பரம் செய்யப்பட்டாலும் உண்மையில் எண்பது சதவீத இந்திய பெண்கள் துணிதான் உபயோகிக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்களுக்கு பயந்து அந்த துணியை சரியாக உலர்த்தாமல் சுத்தம் செய்யாமல் அணிவதால் எத்தனை பேர் கர்ப்பப்பை வாய் புற்று நோய் வரைக்கும் உள்ளாகிறார்கள் தெரியுமா ..
என்ற கேள்வி எழும்போது கூடவே அதிர்ச்சி ஏற்படுவரை தடுக்க முடிவதில்லை .
நாப்கின் உபயோகிக்கும் பெண்களுக்கு அவர்களுக்கான கழிப்பறைகளில் அதற்கான அடிப்படை வசதி ஏற்படுத்தி தந்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி எங்குமே இல்லை வெறும் ஆவணப்படம் எடுப்பதுடன் நின்று விடாமல் ஒரு படி மேலே போய் அரசு அலுவலகங்களில் உள்ள பெண்களுக்கான கழிப்பறைகளில் மாதவிடாய் தேவைகள் என்ன செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்ட போது அப்படி ஒரு வசதியும் செய்து தரப்படுவதில்லை என்பதே பதிலாக வந்துள்ளது என்பதை ஆதாரத்துடன் காட்டும் போது பார்க்கும் நமக்கு வெட்கமாக இருக்கிறது.
அவ்வளவு ஏன் சட்டம் இயற்றும் சட்ட மன்ற கட்டடத்திலேயே இந்த அடிப்படை வசதி இல்லை என்கிறார்
""சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி ""..
இவரைப்போல 55 பெண்கள் தங்களது கருத்துக்களை வலுவாக பதிந்துள்ளனர்.
••அம்மா உங்க புடவையில கறை••
என்றதுமே ஏதோ குற்றம் செய்துவிட்டது போல பதறிப்போவோம். இனி அந்த பதற்றமே கூடாது என்றும் கூறுகிறார்.
வீடுகளில் அலுவலகங்களில் இருக்கும் பெண்களுக்கு இது மாதிரிப் பிரச்னை என்றால் களப்பணியாற்றும்
""பெண் போலிசாரின் நிலைமை இன்னும் மோசம்"",......
சாதிக்கலவரம் நடக்கும் இடத்திற்கு செல்லும் பெண் போலிசார் அவசரம் கருதி ஏதேனும் ஒரு வீட்டிற்குள் நுழைந்து நிட்டால் போலீஸ் அந்த சாதிக்கு ஆதரவாயிடுச்சுன்னு சொல்லி விடுவர் என்கிறார்
"""முன்னாள் போலீஸ் அதிகாரி திலகவதி""".
மகளுக்கு விதம் விதமாக நகைகள் வாங்கிக் கொடுத்து அழகு பார்ப்பதை விட அவளின் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண விளையுங்கள். பொன் நகை ஏற்படுத்தாத புன்னகை அவள் முகத்தில் தவழும்.
மகப்பேறு குழந்தை வளர்ப்பு போல மாத விடாயும் பொம்பளைங்க சமாசாரம் என ஒதுக்கி வைக்கும் ஆண்களே இனியும் அப்படி இருக்காதிர்கள்.. அது உங்கள் ஆண்மைக்கே அழகல்ல
மேற்சொன்ன அனைத்திலும் உங்களுக்கு ஆழமான பொறுப்பு உண்டு என்று
அழுத்தந்திருத்தமாய் சொல்லி முடிகிறது ஆவணப்படம்....
DIRECTOR : GEETHA ELANGOVAN

No comments:
Post a Comment